சென்னை: தொடக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட தொடக்கப் பள்ளிகள் செயல்படக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மீறி செயல்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட சுயநிதி மழலையர், நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தொடக்க அங்கீகாரம் வழங்கிய பிறகு, ஒவ்வொரு ஆண்டு அல்லது 3 ஆண்டுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனினும் சில பள்ளிகள் அங்கீகாரம் இல்லாம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளபடி அங்கீகாரம் இல்லாமல் எந்த பள்ளியும் செயல்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் ந டுநிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்கள் அனுப்ப வேண்டும். அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகள் உடனடியாக இந்த கல்வி ஆண்டுடன் மூடுதல் உரிய விதிமுறைகளின்படி அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு பள்ளிகளை மூடுவதற்கான உரிய நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க அங்கீகாரம், மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், சுயநிதி தொடக்க நடுநிலைப் பள்ளிகள், உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளை மூடுதல் தொடர்பாக விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டால், அந்தந்த வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். …