சென்னை: தமிழக காங்கிரஸ் பொதுக்குழு வேப்பேரி ரித்தர்டன் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நேற்று கூடியது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தேர்தல் பொறுப்பாளர் சவுரவ் கோகாய், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், ஸ்ரீவல்ல பிரசாத், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ, துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தாமோதரன், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம் மற்றும் அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகர், நாஞ்சில் பிரசாத், டில்லிபாபு, ரஞ்சன்குமார், முத்தழகன், அடையார் துரை உள்பட 76 மாவட்ட தலைவர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 710 பேரில் 652 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப் பினர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டு அவர் களுக்கு எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர். மேலும் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் யாரும் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வலியுறுத்தி பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானம் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது….