அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் அலமாரியில் மகள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. படுக்கையின் அடியில் தாயின் சடலம் இருந்தது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்தார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள கக்தாபித் போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்குட்பட்ட பூலாபாய் பார்க் பகுதியில் மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்வார்கள். நோயின் தன்மை குறித்து சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள், துர்நாற்றம் வீசிய அறைக்கு சென்று பார்த்தனர். ஆபரேஷன் தியேட்டரின் அலமாரியில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் சடலம் இருந்தது. அவரது தாயின் சடலம் படுக்கையின் அடியில் கிடந்தது. 2 உடல்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கக்தாபித் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதில், தாயும், மகளும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர் என்ற விவரம் மட்டும் தெரியவந்துள்ளது. அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணிபுரியும் மன்சுக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவர்கள், கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….