திருவாரூர், மே 4: திருவாரூர் மாவட்டத்தில் வெப்ப அலை வீசி வருவதால் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை இருந்து வருவதன் காரணமாக சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவு படியும், திருச்சி கூடுதல் ஆணையர் ஜெயபால்,
இணை ஆணையர் திவ்ய நாதன் ஆகியோர் வழிகாட்டுதல் பேரிலும் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வெப்ப அலையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் அவர்கள் பணிபுரியும் இடங்களில் சுத்தமான குடிநீர், காற்றோட்டம், மின் வசதி, இருக்கை வசதி மற்றும் சுத்தமான கழிவறை வசதி ஆகியவற்றினை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதுடன் சுழற்சி முறையில் தொழிலாளர்களுக்கு விடுமுறையும் அளிக்க வேண்டும். இது மட்டுமின்றி வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்கள் தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்படுத்த வேண்டும்.