ஈரோடு, மே 21: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்திருந்தனர். வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கக் கோருதல் உள்ளிட்டவை தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டு சென்றனர்.