சிவகாசி, பிப். 25: வத்திராயிருப்பு அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகன் முருகன் (42). இவரிடம் சிவகாசி ஞானகிரி ரோட்டை சேர்ந்த முத்துவேல் மனைவி ஜெயந்தி தங்களுக்கு சொந்தமான வணிகவளாக கட்டிடத்தை பொது அதிகார ஆவண பத்திரம் செய்து கொடுத்து ரூ.80 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முருகன் அந்த இடத்தை தங்கமுனியசாமி என்பவருக்கு ரூ.85 லட்சத்துக்கு விலை பேசிமுடிக்க மதுரை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற போது முருகனுக்கு எழுதி கொடுத்த பொது அதிகார ஆவண பத்திரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இது குறித்து முத்துவேல், ஜெயந்தி தம்பதியிடம் கேட்ட போது சரியான பதில் கூறாமல் இருந்துள்ளனர். தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்த முருகன் இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சிவகாசி தம்பதி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.