வி.கே.புரம்: வி.கே.புரம் அருகே சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (19), பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அஸ்வின், தனது நண்பர்களான விக்கி, மாரி கணேஷ், மதன், ரோஷன் ஆகிய 4 பேருடன் பாபநாசம் தலையணை பகுதியில் குளிக்க சென்றார். பின்னர் ஆழமான பகுதிக்கு சென்ற அஸ்வின் நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து பதறிய அவரது நண்பர்களால் முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வி.கே.புரம் போலீசார் மற்றும் அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள் அருணாசலமுருகன், அருணாசலம், கோபால குமரேசன், பன்னீர்செல்வம், ஜாபர்அலி, இசக்கிபாண்டியன், பசுங்கிளி, சண்முகம் உள்ளிட்டோர் தலையணையில் மூழ்கிய அஸ்வினை தேடும் பணியில் நேற்று நள்ளிரவு வரை ஈடுபட்டும் பலனில்லை. பின்னர் நேற்று அதிகாலையில் தேடும் பணியை தொடர்ந்த தீயணைப்பு படையினர், தலையணை பாறை இடுக்கில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த அஸ்வினின் உடலை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இறந்த அஸ்வினுக்கு பிரேமலதா என்ற தாயாரும், ஆதித்யா என்ற தம்பியும் உள்ளனர். இதுகுறித்து வி.கே.புரம் எஸ்ஐ தாணு விசாரித்து வருகிறார்….