ஆரணி, ஜூன் 3: ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அக்னி வசந்த விழா கடந்த 14 ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு, அலகு நிறுத்தி விழா தொடங்கியது.
மேலும், தினமும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகாபாரத சொற்பொழிவு மற்றும் கட்டைகூத்து நாடகங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடந்த்து. அப்போது, கோயில் வளாகம் முன்பு களிமண்ணால் பிரமாண்டமான துரியோதனன் உருவபொம்மை அமைத்து, வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, மதியம் துரியோதனன், பீமன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் துரியோதனனை பீமன் வதம் செய்யும் காட்சியிகளை நடித்து காட்டி துரியோதனன் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, மாலை நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில், பக்தர்கள் விரதமிருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தி வழிப்பட்டனர். இவ்விழாவில், ஆரணி சுற்றுட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்படுகளை ஊர்பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.