திருவண்ணாமலை, ஜன.12: செங்கம் அருகே மாதச் சீட்டு நடத்தி ₹23 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். செங்கம் தாலுக்கா, காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(48). இவர், அதே பகுதியில் மாதாந்திர ஏல சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு மாதாந்திர சீட்டில் சேர்ந்து 5 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால் முதிர்ச்சி காண முடிந்த பிறகும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மகேந்திரன் அலைகழித்துள்ளார். மேலும், மோகன்ராஜ் அறிமுகப்படுத்தி வைத்த 7 நபர்கள் செலுத்திய சீட்டுத் தொகை சுமார் ₹18 லட்சத்தையும் உரிய காலத்தில் தராமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.மேலும், இவரிடம் வேறு யாராவது சீட்டு பணம் செலுத்தி ஏமாந்துள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.