புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில், நமிபீயாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை கூண்டில் இருந்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்து விட்டு கேமராவில் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கர் இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘எல்லா உண்மைகளையும் மூடி வைப்பது இருக்கட்டும். ஆனால், புகைப்படம் எடுக்கும்போதும் கேமரா லென்ஸ் கவரை மூடி வைத்திருப்பதுதான் உங்களின் தொலைநோக்கு பார்வையா…?’ என கிண்டல் செய்து இருந்தார். இவர் வெளியிட்ட மோடியின் புகைப்படத்தில், கேமராவின் லென்ஸ் கவர் மூடப்பட்டு இருந்தது. சிர்கர் வெளியிட்ட இந்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை ஆராயப்பட்ட போது, அது போலி என்பது தெரிந்தது. மோடி பயன்படுத்தியது நிகான் கேமரா. ஆனால், சிர்கர் வெளியிட்ட புகைப்படத்தில் மோடி வைத்துள்ள கேமராவின் லென்ஸ், கேனான் கேமராவின் மூடியால் மூடப்பட்டுள்ளது. இது பற்றி பாஜ மூத்த தலைவர் சுகந்தா மஜும்தார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இது, போலி பிரசாரத்தை பரப்பும் மோசமான முயற்சி. மம்தா அவர்களே… உங்கள் கட்சியில் குறைந்தபட்ச பொது அறிவு கொண்டவர்களையாவது எம்பி.யாக நியமியுங்கள்,’ என்று விமர்சித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை சிர்கர் நீக்கி விட்டார்….