சென்னை: மதுரை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 4 பேர் தன்னை தாக்கியதாக அதே இனத்தை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை சமயநல்லூர் சரக டி.எஸ்.பி.க்கு அனுப்பிய ஆணையம், அலங்காநல்லூர் காவல் நிலைய எஸ்.ஐ. மீது எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை முடிக்கப்பட்டு ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் திருப்தி இல்லை என கூறி, அலங்காநல்லூர் உதவி ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், விசாரணை அதிகாரியாக சமயநல்லூர் சரக டி.எஸ்.பிக்கு பதிலாக வேறு அதிகாரியை நியமிக்குமாறு மதுரை மாவட்ட எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட எஸ்.பி மற்றும் சமயநல்லூர் சரக டி.எஸ்.பி. ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், தங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் இ. ராஜ்திலக், காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட எஸ்.சி. எஸ்.டி ஆணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றார். இதையடுத்து, அலங்காநல்லூர் காவல் நிலைய எஸ்.ஐ மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்….