காரியாபட்டி, மார்ச் 13:காரியாபட்டி பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வார்டுகளிலும் தினமும் தேங்கி கிடக்கும் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. மேலும் வடிகால் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மண் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கு தேங்கி கிடக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தீவிர தூய்மை பணி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் ஆர்.கே.செந்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அனைத்து வார்டுகளிலும் தீவிர தூய்மை பணி முகாமில் வாறுகால் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
ஒரு வார காலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெறும். காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்படும். தூய்மை பணிகள் நடைபெறும் போது பேரூராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.