சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டம் நடத்தினர். பள்ளி முன்பு கடந்த ஜூலை 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம் திடீரென வன்முறையில் முடிந்தது. இதையடுத்து சின்ன சேலம் போலீசார் ஸ்ரீமதி தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், கலவரம் தொடர்பாக சின்னசேலம் காவல் நிலையம் போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது மகள் ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்தும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்து தவறான வகையில் யூடியூப் சேனல் ஒன்று தொடர்ந்து அவதூறாக பதிவு செய்து வருகிறது. இதனால் எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. பல முறை இதுகுறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகியிடம் பேசியபோது, அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு கருத்துக்களை பொதுமக்களிடையே பரப்பி வருகின்றனர். எனவே எனது மகள் ஸ்ரீமதி இறப்பு குறித்தும், எங்கள் குடும்பம் குறித்து தவறாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டு வரும் யூடியூப் சேனலை தடை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது….