ஈரோடு, மே 31: ஈரோடு மாவட்டம், பெருந்துறை, வாய்க்கால் மேடு அருகே, பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கேரள மாநிலம், வய நாடு, வெள்ளும் தாளத்து பகுதியை சேர்ந்த வைசாக் (21), கேரள மாநிலம், எர்ணாகுளம், புத்தன்வேலிக்கரா பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (21), கடலூர் மாவட்டம், விருதாச்சலம், வடக்கிறுப்பு பகுதியை சேர்ந்த மதன்குமார் (21), கரூர் மாவட்டம், தோகமலை, பச்சனம்பட்டியை சேர்ந்த ராகேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும், வெளியூரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் 4 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், ரூ.4,100 மதிப்புடைய 410 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.