கோவை, மே 31: கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் லாரியில் 3 டன் ரேஷன் அரிசியை ஏற்றி கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்திய உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த அபிப் ரகுமான் (40) என்பவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பிடிக்க முயன்றனர். இவர் தப்பி விட்டார். சில நாட்களுக்கு முன் பேரூர் அருகே போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர், இதே போன்று அரிசி கடத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மண்டல எஸ்.பி பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அபிப் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அபிப் ரகுமான் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.