சென்னை: சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்புள்ள கற்களை கடத்திய வழக்கில், 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘காபிபோசா’ சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜாகீர் உசேனை கைது செய்தனர். சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2010ம் ஆண்டு விலை உயர்ந்த கற்களை கடத்தியாக ஒன்றிய வருவாய் துறை அதிகாரிகள் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன்(54) என்பவரை பிடித்து சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஜாகீர் உசேன் மீது கடந்த 2010ம் ஆண்டு ‘காபிபோசா’ அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டம் 1974 என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சட்டத்தை எதிர்த்து ஜாகீர் உசேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆன்ந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அசோசியேட் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எஸ்.சுந்தரேசன் ஒன்றிய வருவாய்துறை பரிந்தரைப்படி தான் இந்த வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், சட்டவிரோதமாக கற்கள் கடத்தியதால் ஒன்றிய அரசுக்கு ரூ.1.17 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. அதன் பெயரில் தான் ஜாகீர் உசேன் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனவே, காபிபோசா சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்த ஜாீகீர் உசேன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைதொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து கடத்தல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 30ம் தேதி திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜாகீர் உசேனை கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 12 ஆண்டுகளாக நிலுவயைில் இருந்து வழக்கை பல சட்டப்போராட்டத்திற்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை சென்னை மாநகர காவல் ஆணையர் கமிஷனர் சங்கர் ஜிவாவல் பாராட்டு தெரிவித்தார்.