சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜா சந்தித்து பேசினார். பா.ஜ.க.வுடன் த.மா.க கூட்டணியை ஜி.கே.வாசன் உறுதி செய்த நிலையில், திடீர் சந்திப்பால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக, பாஜ கூட்டணி உடைந்துள்ளதால், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதே போல பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவித்தது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா, சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக யுவராஜா கூறியுள்ளார். யுவராஜாவை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இபிஎஸ்-ஐ சந்தித்தார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யுவராஜ் “மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்” என தெரிவித்தார்.