Saturday, May 4, 2024
Home » ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாளில் ரூ.1500 தரப்படும் யூடியூப் சேனல் மூலம் வலைவிரித்து ரூ.41.88 லட்சம் மோசடி-தம்பதி கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல்

ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாளில் ரூ.1500 தரப்படும் யூடியூப் சேனல் மூலம் வலைவிரித்து ரூ.41.88 லட்சம் மோசடி-தம்பதி கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல்

by Karthik Yash

கோவை: யூ டியூப் சேனலில் கவர்ச்சியாக விளம்பரம் செய்து 44 பேரிடம் ரூ.41.88 லட்சம் வசூலித்து மோசடி செய்த கோவை தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). இவர்கள் கடந்த 2020ல் யூடியூப் சேனலை துவங்கினர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தம்பதி தங்களது யூடியூப் சேனலில் ரூ.1,200 முதலீடு செய்தால், 20 நாட்களில் ரூ.1,500 ஆக திருப்பி தரப்படும் என்று அறிவித்தனர். இதை நம்பிய பலர் அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தினர்.

ஆனால் தம்பதி அறிவித்தபடி திருப்பி கொடுக்கவில்லை. மேலும் தம்பதி செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டனர். இது குறித்து, முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா (30) கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், இந்த தம்பதி 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா, இவர்களுக்கு உதவிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250, ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடும்ப பெண்களை குறிவைத்தே இந்த மோசடி அரங்கேறியுள்ளது. அவர்கள் முதலீடு பணத்தை நேரில் வாங்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவே பெற்றுள்ளனர். சிறிய தொகையாக இருக்கும்போது அதற்கான லாபத்தை கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்களை ஆசை வலையில் வீழ்த்தி பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி உள்ளனர். கொரோனா காலத்தில் பல பெண்கள் பணத்தை இழந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர போலீசில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

17 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi