குடியாத்தம்: வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎப்எஸ்(இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்) என்ற நிதி நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால், பொதுமக்கள் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐஎப்எஸ் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லேரியை சேர்ந்த சின்னராஜ் மகன் பிரசாத்(39), என்பவர் பெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர், காஞ்சிபுரம் மாவட்டம் கரும்பூர் பகுதியில் உள்ள ஐஎப்எஸ் ஏஜென்ட் வெங்கடேசன் மூலம் ரூ.26 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதில் மனமுடைந்த பிரசாத் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பு பிரசாத் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘நான் கடன் பெற்று அதிக வட்டிக்கு முதலீடு செய்தேன். கடன் கொடுத்தோர் பணத்தை திரும்ப கேட்டபோது என்னால் கொடுக்க முடியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் ரூ.12 லட்சத்துக்கு மேல் வட்டி கொடுத்துவிட்டு, அதிக கடன் சுமையில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன். என் சாவுக்கு காரணம் ஐஎப்எஸ் நிறுவனம். இதுகுறித்து போலுசார் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோரிடம் உரிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என எழுதி உள்ளார்.