ஜெய்ப்பூர்: அக்னிபாத் திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை பிரதமர் மோடி சிதைத்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானின் டோல்பூர் மாவட்டத்தில் நடந்த பிரசார பேரணியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அக்னிபாத் திட்டத்தின் மூலமாக ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார். பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்புகிறார். கவுதம் அதானி மக்களின் பாக்கெட்டுக்களில் இருந்து பணத்தை எடுக்கிறார். அமித் ஷா தடியோடு மறுப்பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். இப்படி தான் ஒன்றிய அரசு நடந்து கொண்டு இருக்கின்றது. பிரதமர் மோடி 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் வருகிறார். ஏனென்றால் அவற்றை அதானி வாங்கிவிட்டார்” என்றார்.