திருவள்ளூர்: திருத்தணி- அரக்கோணம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை பின்புறம், நேற்று 18ம் தேதி காலை வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வழிமறித்து தகராறு செய்தும், கத்தியை மிரட்டி பணம் பறித்தும், கொலை மிரட்டல் விடுத்தும் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, திருத்தணி சிறப்பு எஸ்ஐ வேலு மற்றும் இரண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரையும் அந்த வாலிபர் கத்தியை காண்பித்து, என்னை நெருங்கினால், உங்களையும் வெட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தப்பியோட முயன்றார். அப்போது பொதுமக்கள் உதவியுடன் போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டியவர் திருத்தணி சித்துார் சாலையை சேர்ந்த சாய் கல்யாண்(25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து சாய்கல்யாணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.