திருமலை: வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி கங்கனம்மாபேட்டையில் வசிப்பவர் ரமேஷ் (40). இவரது மனைவி அலேக்யா(35). இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு மாடியில் உள்ள ஒரு அறையில் தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை பார்த்தபோது அலேக்யாவை காணவில்லை. உடனடியாக ரமேஷ் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது மனைவி அலேக்யா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து உடனடியாக தெனாலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார், ரமேஷிடம் விசாரணை நடத்தினர். அதில் ரமேஷ் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக னிவாஸ் என்பவர் எனது மனைவி எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எனது மனைவிக்கு பலமுறை மிரட்டல் விடுத்தார். ஒருமுறை கொல்லவும் முயன்றார். இதுதொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இந்த வழக்கில் னிவாஸ்க்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதால், அவர்தான் எனது மனைவியை கொலை செய்திருக்க வேண்டும். கொலை மிரட்டல்தான் விடுகிறார் என்று நினைத்தோம். ஆனால், இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபடுவார் என நினைக்கவில்லை என்று தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மாடியில் தூங்கிய அலேக்யாவை கொலையாளி கீழே இழுத்து வந்து கொலை செய்திருக்கலாம். கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து அலேக்யா கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த விதத்தை பார்த்தால் பழைய குற்றவாளிகள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.