Friday, May 10, 2024
Home » அண்ணனை தாக்கியதற்கு பழிக்குப்பழி: இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி வாலிபரை கொல்ல தங்கை முயற்சி

அண்ணனை தாக்கியதற்கு பழிக்குப்பழி: இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி வாலிபரை கொல்ல தங்கை முயற்சி

by Neethimaan

* 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
* சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்

மதுரை: மதுரை, புதுஜெயில் ரோட்டை சேர்ந்தவர் வினித்குமார்(23). இவர் இன்ஸ்டாகிராமில், அம்மு என்ற பெண்ணுடன் பழகி வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரை தொடர்பு கொண்ட பெண், மதுரை சின்னசொக்கிகுளம் அருகே உள்ள பிரபல மால் அருகே உள்ள தெருவுக்கு வரும்படி கூறினார். அதன்படி அங்கு டூவீலரில் சென்ற வினித்குமாரை, அங்கு நின்றிருந்த 2 ஆண்கள், 2 பெண்கள் வழிமறித்து செல்போனை பறித்துக் கொண்டனர். பின்னர் பட்டாக்கத்தியால் வெட்டினர்.

இதில் காயத்துடன் தப்பிய வினித்குமார், தல்லாகுளம் போலீசில் அளித்த புகாரின்பேரில், 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரையும் வழிப்பறி வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வினித் குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாக்ஸை, வினித் குமார் கொலை செய்வதாக மிரட்டி தாக்கியுள்ளார். காயங்களுடன் தப்பிய ஜாக்ஸ், தங்கை அனுசியாவிடம்(20) கூறி அழுதுள்ளார். எனவே, வினித் குமாரை பழி தீர்க்க முடிவெடுத்த அனுசியா, தனது கணவர் ஜானி முருகனுடன் சேர்ந்து, இன்ஸ்டாகிராமில் அம்மு என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கி, வினித்குமாருக்கு வலை விரித்துள்ளார்.

கோவை நர்சிங் கல்லூரியில் தான் படித்து வருவதாகவும், தன்னுடன் மதுரையைச் சேர்ந்த ஒரு தோழியும் இருப்பதாக தெரிவித்துள்ளார். தினமும் மெசேஜ்களை அனுப்பி வைத்தும், முகத்தை மறைத்தபடி வீடியோ காலில் காதல் பேசியும் வந்துள்ளார். அனுசியாவின் காதல் வலையில் விழுந்த வினித் குமார், அவரை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை பயன்படுத்தி வினித்குமாரை பழி வாங்க முடிவெடுத்த அனுசியா, தோழியுடன் மதுரை வந்துள்ளதாக கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத சந்துக்கு வரச் செய்துள்ளார்.

அங்கு செல்போனை பறித்துக் கொண்ட அனுசியா, அவரது கணவர் ஜானி முருகன், நண்பர் திருப்பதி, தோழி சரண்யா ஆகியோர் சேர்ந்து பட்டாக்கத்தியால் அவரை வெட்டியுள்ளனர். டூவீலரை அப்படியே போட்டு விட்டு, வினித்குமார் தப்பியுள்ளார். விசாரணையில் ஜாக்சின் தங்கை அனுசியா, போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் காதலிப்பது போல பழகி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர். சினிமாவை மிஞ்சும் விதத்தில் அண்ணனுக்காக, தங்கை இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி, காதலிப்பதாக நடித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi