திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிற்பகலுக்குப் பின்னர் 2 மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது.
இதனால் கடந்த 1 மாதத்திற்கு மேலாக மக்களை வதைத்து வந்த வெப்பம் ஓரளவு தணிந்தது. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கும், நாளை (28ம் தேதி) வயநாடு மாவட்டத்திற்கும், 29ம் தேதி பாலக்காடு மாவட்டத்திற்கும், 30ம் தேதி எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.