சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயித்து மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக, வெளிநாட்டு முதலீடுகளை பெரிய அளவில் ஈர்த்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைப்பதுடன் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும் திட்டமிட்டு வருகிறது. இதற்காக உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தலைமையில் உயர்மட்ட குழு ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 23ம்தேதி முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்தார். அவருடன் தற்போதைய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர். வெளிநாடு சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.3,233 கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் வருகிற 2024 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சின்னத்தை (லோகோ) முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்துவதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டுக்காக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் பல நாட்டை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிபர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.
இதன்மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதால் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக வரவேற்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு வருவதாக தொழில் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.