சென்னை: உலக சாம்பியன் செஸ் இறுதிப் போட்டி ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் டிங் லீரன்(31, சீனா) உடன் மோதுவதற்கான வீரரை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் ஓபன் செஸ் போட்டி கனடாவில் நடந்தது. அதில் இந்திய வீரர் தொம்மராஜூ குகேஷ்(17) முதலிடம் பிடித்தார். அதன் மூலம் குகேஷ் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட தகுதிப் பெற்றார். கூடவே விசுவநாதன் ஆனந்துக்கு பிறகு, அதுவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட உள்ள இந்தியர், இளம் வீரர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் கனடாவில் இருந்து நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு விமானநிலையத்தில் அவரது குடும்பத்தினர், பள்ளி மாணவர்கள், அகில இந்திய சதுரங்க கழக நிர்வாகிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், ‘கனடா தொடரில் முதலிடம் பிடித்து , உலக சாம்பியன் இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிப் பெற்றது சிறப்பான சாதனை. அந்த தொடரில் 7வது சுற்றில் தோல்வியை சந்தித்தாலும், கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் காட்டினேன். அதற்கு பலன் கிடைத்தது. தமிழ்நாடு அரசு நடத்திய ‘சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்’தான் எனக்கு கனடா போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை உருவாக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், ஆலோசனைகள் வழங்கிய விசுவநாதன் ஆனந்துக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறனே். நடப்பு சாம்பியன் டிங் லீரன் வலிமையான வீரர். எனினும் அவரை வீழ்த்தவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். தமிழக மக்கள் செஸ் விளையாட்டை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.