காஞ்சிபுரம்: போர்ச்சுகல் நாட்டில் சர்வதேச கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் கிக்பாக்சர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 39 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 3 பெண்கள் உட்பட 9 வீரர்கள் தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து நீனா, சரத்ராஜ், ரோஷினி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் புத்தேரி பகுதியை சேர்ந்த நெசவாளர் நீலகண்டன் மகள் நீனா (19), முதுகலை பட்டம் பயின்று வருகிறார். இவர், கடந்த 6 வருட காலமாக கிக்பாக்ஸிங் பயிற்சி பெற்று இதுவரை 25 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த சரத்ராஜ் (20), கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று 15 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சாலவாக்கம் பகுதியை சேர்ந்த ரோஷினி (20) கடந்த 3 வருடங்களில் 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 2 வென்கலம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மாதம் இந்திய அளவில் நடந்த போட்டிகளில் இவர்கள் வெற்றி பெற்றனர். இன்று போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டிக்கு நீனா 55 கிலோ எடை பிரிவிலும், சரத்ராஜ் 74 கிலோ எடை பிரிவிலும், ரோஷினி 55 கிலோ எடை பிரிவிலும் விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வீரர்கள் கூறுகையில், ‘விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திற்கும் காஞ்சிபுரத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்கள் வெல்வோம். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்’ என்றனர்.