ஆரல்வாய்மொழி : நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜேஸ்வர் ஸ்டீபன். அவரது மகன் ஜாஸ்லின் ஜித். ஆரல்வாய்மொழியை அடுத்த தோவாளை அருகே விசுவாசபுரம் சுடலைமாடன் கோயில் எதிரில் கார் பழுது பார்க்கும் ஒர்க்-ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல கடந்த 6ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், ஒர்க்-ஷாப்புக்கு பழுதுபார்க்க வந்த சொகுசு கார்களை வளாகத்தில் நிறுத்திவிட்டு காம்பவுண்ட் கேட்டை பூட்டி சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது, ஏசி பழுதுபார்க்க வந்த தாழக்குடி மாதேவன் பிள்ளை மகன் அருண் என்பவர் நிறுத்தி சென்ற காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாஸ்லின் ஸ்ரீஜித் உள்ளே சென்று பார்த்தபோது, ஒர்க்-ஷாப் அலுவலக அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கார்களின் சாவிகள் சிதறி கிடந்தன. அதில் காணாமல் போன காரின் சாவி மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.மேலும் ஒர்க்-ஷாப் கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் பார்வையிட்டனர். அதில், அதிகாலை 3 மணியளவில் 2 வாலிபர்கள் கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்து காம்பவுண்ட் கேட்டை உடைத்து உள்ளே செல்வதும், முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரை திறக்க முற்படுவதும் தெரியவந்தது.
பின்னர் சிறிதுநேரம் அங்கே நின்று தங்களுக்குள் பேசி சொண்டவர்கள், ஒர்க்-ஷாப் அலுவலக அறை கதவை உடைத்து கார் சாவியை எடுத்து வந்து ஆன் செய்து காரை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.