சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ள நிலையில் அத்திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேலானோர் பயனடைய உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சிறு குளறுபடியும் இல்லாமல் செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். விண்ணப்பிக்க மின் ரசீது கட்டாயம் இல்லை என்றும் மின் இணைப்பு எண் இருந்தால் போதும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் நாளை முதல் வீடு, வீடாக விநியோகிக்கப்படும் என்றார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.