கடலூர்: கடலூர் சிப்காட் பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். கடலூர் சிப்காட் பகுதி பல்வேறு வகையான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மகளிர் தின விழாவை முன்னிட்டு தொழிற்சாலைகள் பணிபுரியும் மற்றும் அப்பகுதி கிராமங்களில் உள்ள மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். சிப்காட் திட்ட மேலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். குடிகாடு ஊராட்சி மன்ற தலைவர் தேவி சிவகுமார் வரவேற்றார். விழாவில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைப்பு நிர்வாகிகள் அறவாழி மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.