சென்னை : கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷணன், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,”சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது; நாளை முதல் தெருவாரியாக வீடு, வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் இருக்கும்.
முகாம் நடக்கும் இடம் குறித்து நியாயவிலை கடைகளில் தமிழில் பலகை வைக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு 2 கட்டமாக நடைபெறும்.முதற்கட்ட விண்ணப்பப் பதிவு ஜூலை 24ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.முதல்கட்ட சிறப்பு முகாம்களில் 98 வார்டுகளில் பணிகள் நடைபெற உள்ளன.2ம் கட்ட சிறப்பு முகாமில் 102 வார்டுகளில் விண்ணப்பங்கள் பெறப்படும். பொதுமக்கள் டோக்கன் எண்ணுக்கு ஏற்ப அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு குறிப்பிட்ட தேதி, நேரத்தில் பொதுமக்கள் வந்தால் போதும்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்படும்.விண்ணப்பப் பதிவின் போது ஆதார், குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.முகாம்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையும் விண்ணப்பப் பதிவு நடைபெறும். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு ஏற்படுத்தி தரப்படும்.நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்; பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்,”என்றார்.