புதுடெல்லி: பெண் அக்னி வீரர்களின் பலம் 1,000ஐ தாண்டி உள்ளதாக இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “இந்திய கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடந்த ஓராண்டில் கடல் பகுதிகளில் அதிக செயல்பாட்டு வேகத்தை பெற்றுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதிக்கு சீனாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை கப்பலில் தான் முதல் பெண் கமான்டிங் அதிகாரி நியமிக்கப்பட்டார். ராணுவத்தில் பெண் அக்னி வீரர்களின் பலம் தற்போது 1,000ஐ கடந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியிலும், அதற்கு அப்பாலும் நமது தேசிய நலன்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இந்திய கடற்படையின் பிரிவுகள் செயல்படுகின்றன” என்று கூறினார்.