தஞ்சை: தஞ்சையில் வீடு புகுந்து சேலையை இழுத்து மானபங்கப்படுத்தி பாஜ பெண் மாவட்ட செயலாளரை தாக்கி மண்டையை உடைத்த செயின் பறித்த மகளிரணி தலைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மந்திரி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(40). தஞ்சை தெற்கு மாவட்ட பாஜ செயலாளராக இருக்கிறார். தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் கவிதா(39). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜ மகளிரணி தலைவி. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கவிதா ஒரு வாலிபர் உள்பட அடையாளம் தெரியாத 4 பேருடன் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு வீட்டில் தனியாக இருந்த ஜெகதீஸ்வரியை வீடு புகுந்து சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கி, அவரது சேலையை இழுத்து மானபங்கப்படுத்தியதோடு அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினையும் பறித்து கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த ஜெகதீஸ்வரியை அவரது கணவர், தஞ்சை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெகதீஸ்வரி அளித்த புகாரின்பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் கவிதா உள்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ பெண் நிர்வாகிகளிடையே நடந்த இந்த மோதல் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.