புதுடெல்லி: ஏர்இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணியை நடுவானில் தேள் கொட்டியதால் பயணிகள் பீதியடைந்தனர். டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா ஏஐ-630 என்ற விமானம் மகாரஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த மாதம் 23ம் தேதி சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த சவுரப் சின்ஹா என்ற பெண் பயணியை, ஒரு தேள் கடித்துள்ளது. இதனால் மற்ற பயணிகளும் பதற்றம் அடைந்தனர். விமானம் மும்பையில் தரையிறங்கியதும் அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் வீட்டுக்கு திரும்பினார்.
ஏர் இந்தியா வௌியிட்ட அறிக்கையில், “இது ஒரு அரிதான சம்பவம். விதிமுறைகளின்படி விமானம் ஆய்வு செய்யப்பட்டு தேள் அகற்றப்பட்டது. விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. விமானங்களில் உணவு தயாரிக்கும் பிரிவினர் கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா விமானத்தில் தூய்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.