நாமகிரிப்பேட்டை: சேலம் கன்னங்குறிச்சி ராமசாமி நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (39), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதா குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டு, தனது குடும்பத்துடன் தந்தை ஊரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப் பேட்டை ஈச்சம்பாறை பகுதிக்கு குடிவந்தார்.
இந்நிலையில் கோவிந்தனுக்கும் ராதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கோவிந்தன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து ராதா தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராதா அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். பின்னர், உயிருக்கு போராடிய ராதாவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.