கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு நேற்று வருகை தந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சி நிர்வாகி கேசவரெட்டியின் தாயார் மறைவையொட்டி, அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, மேகதாது அணை கட்டுவதற்கான பல்வேறு நிலைகளை உறுதியோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த வேதனை, வருத்தத்தை அளித்திருக்கிறது.
காவிரி பகுதி விவசாயமின்றி பாலைவனம் ஆகி விடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.