சென்னை, ஜூன் 13: மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிடாத வாலிபரை வெட்டிக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்நத்வர் பவுல்ராஜ் (23). ரவுடியான இவர் மீது போக்சோ, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த ரவுடி லோகேஷ் (26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக இருந்தார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் லோகேஷ் வீட்டில் இல்லாத போது, ரவுடி பவுல்ராஜ் கள்ளக்காதலி சத்யா உடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் கடந்த ஒரு வருடமாக லோகேஷிக்கு தெரியாமல் இருவரும் கவனமாக பார்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் நண்பர்கள் மூலம் கள்ளக்காதல் விவகாரம் லோகேஷிற்கு தெரியவந்தது. இதுகுறித்து தனது மனைவி சத்யா மற்றும் நண்பர் பவுல்ராஜிடம் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது மனைவியுடன் பவுல்ராஜ் ஒன்றாக இருந்ததை பார்த்து இருவரையும் லோகேஷ் கண்டித்துள்ளார். அதன்பிறகு கள்ளத்தொடர்பை கைவிடாததால் கடந்த வாரம் லோகேஷ் தனது நண்பனான பவுல்ராஜை சரமாரியாக வெட்டினார். அப்போது, பவுல்ராஜ் தப்பித்து ஓடினார். ஆனாலும் ஆத்திரம் தீராத லோகேஷ், ஓட ஓட விரட்டி நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பவுல்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பவுல்ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, லோகேஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.