சென்னை: மகளிர் தினத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பால் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயனடைவார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையில் ரூ.100 குறைத்திருப்பதால் நிதி சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு மானியத் தொகை ரூ.300ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் 2024ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பெரும் பயனடைவார்கள். ஒன்றிய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை இது வெளிப்படுத்துகிறது. எனவே, ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.