புதுடெல்லி: மாநிலங்களவைக்கு சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்பிக்களாக இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில், பிரதமர் மோடி பேசுகையில், ‘காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், மாநிலங்களவைக்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
அவரது செயலானது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எங்களது அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல செயல்களுக்கு மத்தியில், திருஷ்டி கழிப்பது போல் அவரது செயல் இருந்தது. எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடையில் அவைக்கு வந்தனர். அவர்களின் பேஷன் ஷோவை பார்த்தோம்.
மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நாடாளுமன்ற பங்களிப்பானது, புதிய தலைமுறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என்றார். மாநிலங்களவையில் 68 உறுப்பினர்கள் பிப்ரவரி – மே மாதங்களுக்கு இடையே ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.