பட்டுக்கோட்டை: வேலைக்கு சென்ற கணவரை அழைத்தும் வீட்டுக்கு வர மறுத்ததால் வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(28). இவர் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா(22). இருவருக்கும் கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் தினமும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட முறை ‘ஐ லவ் யூ’ என்ற மெசேஜை மாற்றி, மாற்றி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் வேலைக்கு சென்ற சில மணி நேரத்தில், சுவிதா போன் செய்து கணவரை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் மறுத்ததால் கோபம் அடைந்த சுவிதா, சதீஷிற்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சுவிதா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சதீஷிடம் கூறிவிட்டு, வாட்ஸ் அப் இணைப்பை துண்டிக்காமல் பிற்பகல் 3.45 மணிக்கு கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், உடனடியாக தனது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சுவிதா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
இதனையடுத்து மனைவியை உடனடியாக மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சோகமாக இருந்த சதீஷ் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சதீஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை மருத்துவமனை விட்டு வெளியேறினார். பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி இறந்த அதே நேரமான நேற்று மதியம் 3.45 மணிக்கு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவிதா மற்றும் சதீஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ.(பொறுப்பு) இலக்கியா நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக சுவிதாவின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.