கொல்கத்தா: ரேஷன் அரசி ஊழல் வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்கை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜின் மாநில அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மாலிக் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் வனத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் முன்பு மாநிலஉணவுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது ரேஷன் அரிசி சப்ளையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து அரசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் என்பவரிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியது.
தொடர்ந்து அவரை கைது செய்தது. இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்குக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்கின் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் அரிசியை, சட்டவிரோதமாக விற்று மோசடி செய்துள்ளனர். அரிசி ஆலை அதிபர் ரஹ்மானுக்கு கொல்கத்தா, பெங்களூருவில் ஓட்டல்கள் மற்றும் பார்கள் உள்ளன. வெளிநாட்டு கார்களை வாங்கியுள்ளார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோதிப்ரியா மாலிக்கும் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று கூறினர். மிகப்பெரிய சதித்திட்டம் அமலாக்கத்துறையால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் கூறுகையில், ‘மிகப் பெரிய சதித்திட்டத்தில் பலியாகிவிட்டேன்’ என்று கூறினார்.