ஸ்ரீபெரும்புதூர்: தண்டலம் ஊராட்சியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் புரட்சிபாரதம் கட்சி சார்பில் புதிய ஒன்றிய கவுன்சிலர் அலுவலகம், நீர்மோர் பந்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் தண்டலம் கோபிநாத் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார்.
விழாவில், புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு ஒன்றிய கவுன்சிலர் அலுவலகம் மற்றும் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து, 1000 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக இருங்காட்டுகோட்டை பேருந்து நிறுத்தம் அருகில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார். விழாவில் காட்டரம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் சத்யா பூபாலன், ஒன்றிய துணை செயலாளர் செங்காடு ராமு, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், இருங்காட்டுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வார்டு உறுப்பினர் கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.