திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4.37 லட்சம் என்ற இமாலய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி இந்த முறையும் அதே வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜாவும், பாஜ கூட்டணி சார்பில் மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று மதியம் 12 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக கல்பெட்டா புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ முடிந்த பின்னர் வயநாடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரேணு ராஜ் முன்னிலையில் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.