ஊட்டி:காட்டேரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கிய 2 மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கிய இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அச்சமயங்களில் அனைத்து நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். குறிப்பாக, கேத்தி பாலாடா வழியாக குன்னூர் செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டேரி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்வது மற்றும் புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்து அளவு பெய்யவில்லை. இதனால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது. மேலும் நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் வரத்து இல்லை. குன்னூர் அருகே உள்ள காட்டேரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.