விகேபுரம்: தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் இன்று மீண்டும் தடை விதித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 17ம்தேதி கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு வெள்ளம் வடிந்த நிலையில் அருவிக்கரை பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்புகள் மீண்டும் அமைக்கப்பட்டு கடந்த 27ம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும் சென்று வந்தனர். அதன்பிறகு மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு நீர்த்தேக்கங்களிலிருந்து படிப்படியாக 5 ஆயிரம் கன அடி வரை திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து மறுநாள் காலை 11 மணியில் இருந்து அகஸ்தியர் அருவிக்கும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
தொடர்ந்து 2, 3ம்தேதிகளில் அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அகஸ்தியர் அருவியில் இன்று மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கரை மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.