திருப்போரூர்: சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று திரும்பிய கல்லூரி மாணவனுக்கு திருப்போரூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் கடந்த வாரம் கோவா மாநிலத்தில் நடைபெற்றது. திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையை சேர்ந்தவர் வெற்றிவேல்முருகன். இவரது மகன் காவியன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
கோவா மாநிலத்தில் நடைபெற்ற இளையோருக்கான தேசிய குத்துச்சண்டை போட்டியில் காவியன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் காவியன் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டிகளில் பங்கேற்றவர்கள் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாட்டிற்கு திரும்பினர். திருப்போரூர் வந்த தங்கப்பதக்கம் வெற்ற குத்துச்சண்டை வீரர் காவியனுக்கு அனைத்துக் கட்சியினர், உள்ளூர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.