Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு

திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்தது. திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு பக்தர்களை வெக்காளியம்மன் காப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பு பெற்றது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு கோயில் சார்பில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சரவணன், தக்கார் லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறையூர் மட்டுமின்றி மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.