300 ஆண்டுகளுக்கு மேலாக சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக இன்றும் ஊர் கூடி கொண்டாடும் விழாவாக உலகப் புகழடைந்து நிற்கிறது மதுரை சித்திரைத் திருவிழா. கோடைகாலம் வந்துவிட்டாலே அத்தனை கோவில்களிலும் திருவிழாக்கள், குறிப்பாக மாரியம்மன் கோவில்களில் கூழ் என இருப்பதன் காரணம் கோடையின் உச்சத்தைச் சமாளிக்க இப்படியாவது மக்கள் மோர், பானகம், என்றிருக்கட்டும் என்பதும். மேலும் மாரியம்மன் கோவில் திருவிழாக்களின் முக்கியம்சமாக கூழ், வேப்பிலை என எங்கும் இருக்கும் பட்சத்தில் கொண்டாட்டத்தை மீறிய மருத்துவமும் இருப்பதனாலேயே இன்றளவும் இந்தத் திருவிழாக்களை தமிழர்கள் விட்டுக் கொடுக்காமல் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதில் மதுரையில் இன்னும் சிறப்பாக ஒரு காலத்தில் சைவ – வைணவ சண்டைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சித்திரை திருவிழா மதத்தை இணைத்து உருவாக்கப்பட்ட திருவிழாவாக உள்ளது. ஆகையால், அதற்கு கூடுதல் சிறப்பு உண்டு. திரும்பும் திசையெங்கும் மக்கள் வெள்ளம், சித்திரை வெயில் தாகத்தைத் தணிக்க நீர், மோர், குளிர் பானம், பசி போக்க வழிநெடுக அன்னதானம் என மீனாட்சி அம்மன் கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா அழகர் மீண்டும் கோவிலுக்குத் திரும்பும் வரையில் 16 நாட்கள் நடைபெறும். இந்த வருடமும் எங்கும் டிரெண்டிங்கில் மதுர குலுங்க என சமூக வலைதளங்கள் சித்திரைத் திருவிழா சிறப்பாக இப்போது வரை குலுங்குகின்றன.
இதற்கிடையில் ஒரு இஸ்லாமியப் பெண்மணி தன் மகளுக்கு தத்ரூபமாக மீனாட்சியின் வேடமிட்டு அழைத்து வந்திருந்த காட்சி காண்போர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த அம்மா மகள் புகைப்படம் சென்ற வருடம் எடுத்தது என்றாலும் சித்திரை திருவிழா வரும் போதெல்லாம் டிரெண்டிங்கில் வந்துவிடுகிறது. இதுதான் உண்மையான சமத்துவம் என பலரும் அதனை பகிர்ந்து வருகின்றன. தேர் வடம் பிடித்து இழுக்கும் இளைஞர்கள் தங்களை உற்சாகமாக்கிக் கொள்ள ‘ மீனாட்சி சுந்தர சோம சுந்தர’ என பாடிக் கொண்டே தேரை இழுப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் இன்னொரு சிறப்பம்சமாக ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் இறுதியில் கயிறு இழுக்கும் காட்சியில் வரும் ‘உண்டான காயமெங்கும் தன்னாலே…’ என்னும் ‘குணா’ படத்தின் வரிகள் ஒலிப்பெருக்கியில் ஒலிக்க விட தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள் மதுரை பாய்ஸ்.