சென்னை: விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று 39 ஜோடிகளுக்கு திருமணம் முரளி நடத்தினார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி முரளி யை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு,
கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் முரளி என்ற ரகுராமனை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.