சென்னை: விழுப்புரம் அருகே சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் இன்று (16.07.2023)- அதிகாலை 05.00 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் லட்சுமி (வயது 45) க/பெ. வல்லத்தான் மற்றும் மோதியதில் கோவிந்தம்மாள் (வயது 50) க/பெ. கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். கெங்கையம்மாள் (45) க/பெ. அஞ்சாபுலி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (வயது 45) க/பெ. ராமலிங்கம், கேமலம் (வயது 46) க/பெ. மூர்த்தி, பிரேமா (வயது 45) க/பெ. நாகராஜ் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் , பலத்தகாயமுற்ற நாயகம் அவர்களுக்கு ரூ.1 லட்சமும் லேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறபட்டுள்ளது.